டெல்லியில் அடுத்தடுத்து உருளும் ஆம் ஆத்மி தலைகள்.. எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை திடீர் ரெய்டு
டெல்லி: மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல நேற்று முன்தினம் டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். வீடு மட்டுமல்லாது அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ரெய்டு குறித்து டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சிறையில் அடைப்பதில் பாஜக அரசு மும்முரமாக உள்ளது என்பதை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். இந்தியா ரஷ்யாவை போன்ற ஒரே தலைவர் என்கிற சர்வாதிகார பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்போது சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சர்வாதிகார நாடுகளில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை, மக்களுக்கு உரிமை கிடையாது.
தற்போது நாங்கள் குஜராத்தில் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். குஜராத் மாநிலத்திற்கு எம்எல்ஏ குலாப் சிங் யாதவ்தான் பொறுப்பாளர். இப்போது அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
என்ன பஞ்சாயத்து?: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தொடர்சியாக சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications