தலைநகர் டெல்லியில் 20 நிமிடங்கள் விடாமல் அலறிய ஏர் சைரன்.. வீதிக்கு வந்த பொதுமக்கள்.. என்ன நடந்தது?
டெல்லி: காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இருப்பினும், இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் சட்டென ஏர் சைரன்கள் அலறியுள்ளன. இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் வீதிக்கு வந்தனர். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் புதன்கிழமை 1.45am அளவில் இந்தியா அதிரடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில் சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலால் பாகிஸ்தானில் இருந்த ராணுவ உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டன.

திடீர் தாக்குதல்
இருப்பினும், இந்தத் தாக்குதலைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றது. காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு வடக்கு எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தியா அதை வெற்றிகரமாக முறியடித்து. இருப்பினும், இந்தத் தாக்குதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
நேற்று தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் அந்த ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஷெட்யூல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அதிகரிக்கும் பதற்றம்
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தின் உச்சியில் இருந்தே ஏர் சைரன்கள் அலறின. வான்வழித் தாக்குதல்கள் கண்டறியப்பட்டால் தான் இந்த சைரன்கள் அலறும்.
20 நிமிடங்கள் அலறிய ஏர் சைரன்
அப்படியிருக்கும் போது திடீரென இந்த சைரன் அலறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிலர் சாலைக்கும் கூட வந்துவிட்டனர். ஆனால், பயப்படத் தேவையில்லை என்றும் சைரன் சோதனையே நடைபெறுவதாக விளக்கம் தரப்பட்டது. பிற்பகல் 3:00 மணிக்குச் சோதனை தொடங்கப்பட்டு 15-20 நிமிடங்கள் நடத்தப்பட்டது. இதுபோன்ற போர் காலச் சோதனைப் பயிற்சியின் போது பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் பீதி அடையத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் சைரன் எண்ணிக்கை அதிகரிப்பு
டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் சைரன்கள் பொருத்தப்படும் என்று டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "டெல்லியில் சைரன்களை நிறுவும் பணி தொடங்கிவிட்டது. டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் சைரன்கள் பொருத்தப்படும். இதன் வரம்பு 8 கிலோமீட்டராக இருக்கும்.. டெல்லியில் மேலும் 40-50 சைரன்கள் பொருத்தப்படும். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை இயக்குவோம். ஒரே இடத்தில் இருந்து எல்லை சைரன்களையும் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், கட்டிடங்களில் அதிகளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதற்குப் பதிலடி தரப் பாதுகாப்புப் படை தயாராகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications