பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ., கூட்டணி கட்சியினரின் கூட்டம்... அதிமுக சார்பில் ரவீந்திரநாத் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார், மற்ற கூட்டணி கட்சியினரும் ஆலோசனையில் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டமும், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா மற்றும் டி.எம்.சி தலைவர் டெரெக் ஓ'பிரையன் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஜூன் 19 ம் தேதி, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பிரதிநிதிகளைக் கொண்ட அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். "ஒரு தேசம், ஒரு தேர்தல்" , 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், மக்களின் நலனுக்கான எந்த ஒரு மசோதாவையும் நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்றார். ஆனால், விவசாயிகள் மன உளைச்சல், வேலையின்மை, வறட்சி குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தற்போது, ஜனாதிபதியின் ஆட்சியில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார், மக்களவைத் தேர்தலை நடத்த முடியுமென்றால் ஏன் மாநில தேர்தல்கள் நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். புதிதாக அமைக்கப்பட்ட 17 வது மக்களவையின் முதல கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூலை 26 வரை நடைபெற உள்ளது.