Delhi Election: 25 ஆண்டுகளுக்குப் பின்னராவது டெல்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? களநிலவரம் என்ன?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான ஊழல் உள்ளிட்டவைகளால் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் பாஜக களத்தில் நிற்கிறது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

டெல்லியில் 1996-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது மதன்லால் குரானா மற்றும் சுஷ்வா ஸ்வராஜ் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர்.
இதன் பின்னர் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ், டெல்லியைக் கைப்பற்றியது. காங்கிரஸின் மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் முதல்வராக பதவி வகித்தார்.
2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சி முழுமையாக நீடிக்கவில்லை. இதனால் ஓராண்டுகாலம் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி முதல்வராக 3 முறை பதவி வகித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவி வகித்து வருகிறார்.
டெல்லியில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான இயல்பான அதிருப்தி அலையை எளிதாக அறுவடை செய்ய முடியும் என நம்புகிறது பாஜக. அத்துடன் 70 சட்டசபை தொகுதிகளிலும் வலிமையான அடிப்படை கட்டமைப்பைக் கொண்டிருப்பது பாஜகவுகு நம்பிக்கையைத் தருகிறது. மேலும் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை ஊழல் உள்ளிட்டவைகள் தங்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாக பாஜக கருதுகிறது.
அதேநேரத்தில் 70 சட்டசபை தொகுதிகளில் 29 இடங்களுக்கு மட்டும்தான் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஞ்சிய 41 இடங்களுக்கு இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மேலும் டெல்லியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் பாஜக அறிவிக்கவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பார்க்கிறது ஆம் ஆத்மி.
இருப்பினும் டெல்லி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரசாரத்தைத் தொடங்கி வைத்துவிட்டார். டெல்லியை பிடித்திருக்கும் பேரழிவு சக்திதான் ஆம் ஆத்மி அரசு என்றும் டெல்லியில் 2025-ல் நல்லாட்சி அரசு அமையும் என்றும் பிரசாரத்தில் மோடி குறிப்பிட்டார். தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால்தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் டெல்லி மக்களைச் சென்றடையும் என்பதால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் பிரசாரம். 10 ஆண்டுகால ஆம் ஆத்மி அரசுக்கு முடிவு கட்டி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக வசம் ஆட்சியை ஒப்படைக்கப் போகிறார்களா டெல்லி வாக்காளர்கள் என்பது பிப்ரவரி 8-ல் தெரிய வரும்!












Click it and Unblock the Notifications