டெல்லியில் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்யும் காங். தலைவர்கள்! ஆனா ராகுல் மட்டும் மிஸ்ஸிங்! என்னாச்சு
டெல்லி: டெல்லியில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி மட்டும் அதில் மிஸ்ஸிங். நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த சூழலில், அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ராகுல் காந்திக்கு என்னாச்சு என்று காங்கிரஸ் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
டெல்லியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியைப் பொறுத்தவரை அங்கே கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் அதிஷி முதல்வராக உள்ளார்.

அதேபோல அங்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி டெல்லி தேர்தலுக்குச் சுற்றிச் சுற்றி தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வரும் சூழலில், இதில் ராகுல் காந்தி மட்டும் மிஸ்ஸிங்.
ராகுல் காந்தி:
டெல்லி தேர்தலுக்காகக் கடந்த பல வாரங்களாகவே காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வரும் போதிலும், ராகுல் காந்தி மட்டும் அதில் எதிலும் பங்கேற்கவில்லை. நேற்று கூட டெல்லியில் சதார் பஜார் தொகுதியில் உள்ள இந்தர்லோக் மெட்ரோ நிலையம் அருகே நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும், உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தி கடைசி நேரத்தில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகாவின் பெலகாவி பகுதியில்'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்' என்ற பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்தார். அதேபோல புது டெல்லி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் (மாஜி காங்கிரஸ் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன்) ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவிருந்தார். அங்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பாஜகவின் பர்வேஷ் வர்மா போட்டியிடும் நிலையில், சந்தீப் தீட்சித்திற்கு ஆதரவாகப் பாதயாத்திரை நடத்த இருந்தார்.
ராகுல் காந்தி மிஸ்ஸிங்
இருப்பினும், இரண்டு நிகழ்ச்சிகளிலுமே ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. பாட்னாவில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது முதலே ராகுல் காந்தி உடல்நல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் இதன் காரணமாகவே பிரச்சாரம் உள்ளிட்ட எந்தவொரு கூட்டத்திலும் ராகுல் காந்தியால் பங்கேற்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தர்லோக் மெட்ரோ நிலையம் அருகே நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்ற நம்பிக்கையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ராகுல் காந்தியால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் அறிவித்தார். அதேநேரம் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரையை டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் வாசித்தார்.












Click it and Unblock the Notifications