டெல்லி பாஜக பிரசார பேனரில் குடிசைவாசியாக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்- புதிய சர்ச்சை
டெல்லி: டெல்லி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) பிரசார பேனரில் குடிசைவாசிகளில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடிசை பகுதி வாக்காளர்களை இலக்கு வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" சர்ச்சை என்ன?
பாஜக பிரசாரம்
மேலும் ஜூக்கி சம்மான் யாத்ரா என்ற குடிசை பெருமித பேரணியை பாஜக நடத்தி வருகிறது. கடந்த மாதம் அக்டோபர் 15-ந் தேதி முதல் இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களாக இந்த பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழர்கள் அதிர்ச்சி
இதன் அடுத்த கட்டமாக நமோ ஜூக்கி சேவா கேந்திரா என்ற பேரணியும் நடத்தபட உள்ளது. இது தொடர்பாக டெல்லி தெருக்களில் பாஜக பேனர் ஒன்றை வைத்துள்ளது. குடிசைவாசிகளின் படங்களுடன் கூடிய இந்த பேனரில் இருக்கும் படம் தமிழர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்
ஏனெனில் இந்த குடிசைவாசிகளில் ஒருவராக தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் படம் வைக்கப்பட்டுள்ளார். இணையத்தில் தேடி ஏதோ ஒருவர் படம் நினைத்து பெருமாள் முருகனின் படத்தை டெல்லி குடிசைவாசிகளில் ஒருவராக்கி இருக்கிறது பாஜக. தமது படம் பாஜக பேனரில் இடம்பெற்றுள்ளது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெருமாள் முருகன், "குடிசைவாசிகளில் ஒருவனாக இருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி. I belong to the slums. Delighted!" என குறிப்பிட்டுள்ளார்.
பெருமாள் முருகன் சர்ச்சை என்ன?
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், திருவிழா காலத்தின் இரவு நேரத்தில் பெண்களும் ஆண்களும் விரும்பியவர்களுடன் உடலுறவு கொண்டனர் என அதில் எழுதி இருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு நடத்திய சம்பவங்களும் நடந்தன. மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த இச்சம்பவத்தின் உச்சமாக, "எழுத்தாளர் பெருமாள் முருகனாகிய நான் இறந்துவிட்டேன்..இனி பெ. முருகன் மட்டும் உயிரோடு" என அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.