விசா மோசடி வழக்கு! கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3 வரை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை... அன்றே உத்தரவு
டெல்லி: விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3 ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2011 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது 263 சீன நாட்டவருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
பஞ்சாபில் உள்ள வேதாந்தா நிறுவனத்தில் பணிபுரியும் சீனர்களுக்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் விசா பெற்றுக்கொடுத்தார் என்பது சிபிஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு.

விசா மோசடி வழக்கு
இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றார் என சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 26 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதன் முடிவில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். அவரை முதல் குற்றவாளியாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.

2 வது குற்றவாளி
கார்த்தி சிதம்பரம் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்ந்தது. விசா முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக கடந்த மே 27 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்
அந்தக் கடிதத்தில், "அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் குறிவைத்து மவுனமாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தன்மீது புனையப்பட்டுள்ள இந்த வழக்கானது நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயல்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

கைது செய்ய தடை
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுவை கடந்த 26 ஆம் தேதி விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அந்த தடைக்காலம் இன்று முடிவடைவதை அடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மீது ஜூன் 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications