நான் முதல்வராக வரவில்லை.. விவசாயிகளை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்! மாஸ் பேச்சு!
டெல்லி: நான் இங்கு ஒரு முதல்வராக வரவில்லை, தன்னார்வலராக வந்துள்ளேன் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆம் ஆத்மி முழுமையாக ஆதரிப்பதாகவும். அவர்களின் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பேன் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதிய சட்டங்கள், இடைத்தரகர்களை அகற்றுவதையும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் விவசாயிகளை ஆழ்ந்த கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் விவசாயிகள் பாரம்பரிய மண்டியிலிருந்து விலகி, அரசாங்கத்தால் செலுத்தப்படும் குறைந்தபட்ச விலை உத்தரவாதம் இல்லாமல் யாரிடமும் விற்கும் நிலை வரலாம் என்று அஞ்சுகிறார்கள். விலை பெருநிறுவனங்களே தீர்மானிக்கும் நிலை வரும் என்று எதிர்க்கிறார்கள்.
டெல்லி எல்லையில்
பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து டெல்லியை நோக்கி குவிந்த விவசாயிகள் டெல்லியில் எல்லைப்பகுதிகளான சிங்கு மற்றும் திக்ரியில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இதேபோல். காசிப்பூர் எல்லையிலும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உத்தரபிரதேசத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆறாவது முறை
இதுவரை நடந்த ஐந்து சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. கடைசி சந்திப்பின் போது முக்கிய பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகித்து வரும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டம் பற்றி விவாதிக்க அரசாங்கத்திற்கு அதிக நேரம் தேவை என்று விவசாயிகளிடம் கூறியதுடன், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் புதிய திட்டம் முன்வைக்கப்படும் என்றார். இதனிடையே மத்திய அரசுடன் விவசாயிகள் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளனர் - புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்பு
இந்நிலையில் டெல்லி-ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் சில கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கலந்து கொண்டார். போராடும் விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இவர் தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற முதல் முதல்வர் ஆவார்.
நான் ஏற்கவில்லை
பின்னர் அவர் பேசுகையில் "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சினையும் கோரிக்கைகளும் ஏற்ககூடியது தான். நானும் எனது கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளுடன் நின்றோம். அவர்களின் போராட்டங்களின் ஆரம்பத்தில், டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களை சிறைகளாக மாற்ற அனுமதி கோரியது. எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனால் அனுமதிக்கவில்லை.
பந்துக்கு கெஜ்ரிவால் ஆதரவு
"எங்கள் கட்சி, எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் விவசாயிகளுக்கு ' சேவகர்களாக (தன்னார்வலர்களாக) பணியாற்றி வருகின்றனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஆனால் ஒரு சேவகனாக வந்துள்ளேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர், நாங்கள் அவர்களுடன் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது டிசம்பர் 8 நாடு தழுவிய பந்த் போராட்டத்தில் ஆம் கட்சி தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றார்.