நாளைக்கு 12 மணிக்கு நான் வர்றேன்! முடிஞ்சா கைது பண்ணுங்க மோடி.. சவால் விட்ட கெஜ்ரிவால்! பரபர டெல்லி!
டெல்லி: நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் சென்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்: அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த உடனே தனது பிரச்சாரத்தை துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நரேந்திர மோடி: அவரது பிரச்சாரத்தின் பெரும் பகுதி பிரதமர் நரேந்திர மோடியை தாக்கியே இருந்தது. தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளுக்கு நாள் பாஜகவுக்கு டெல்லியில் பெரிய தலைவலியாகவே உருவாகி வருகிறார். குறிப்பாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு அவளுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தாலும் அதனையே தனது அரசியல் ஆயுதமாக மாற்றி பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
தனி உதவியாளர் கைது: இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சி எம்பியுமான சுவாதி மாலிவால் தான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன் என குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பதினாறாம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரான பிபவ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பாஜக அலுவலகம்: தனக்கு முன் ஜாமீன் கோரி செய்திருந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அந்த மனு வை தள்ளுபடி செய்த நிலையில் அவர் கைதானார். இந்நிலையில் தனது தனி உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளதோடு பாஜக அலுவலகத்துக்கு தான் வருவதாகவும் முடிந்தால் ஆம் ஆத்மி கட்சியினரை கைது செய்யப்பட்டும் என சவால் விடுத்துள்ளார்.
மோடிக்கு சவால்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். நாளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் சென்று பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications