டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் 510 பேருக்கு ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியில் 351 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் பாதிப்பில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,194 ஆக இருந்தது. முந்தைய சனிக்கிழமையை ஒப்பிடுகையில் இது 15% அதிகமாகும். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொரோனாவால் மொத்தம் 25,109 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் திங்கட்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை தாண்டி உள்ளது.

டெல்லி கட்டுப்பாடுகள்
டெல்லியில் ஏற்கனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு கொரோனா
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், லேசான அறிகுறிகளுடனான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்திக் கொண்ட பிரியங்கா
இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், தமது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ கல்லூரிகளில் அதிகரிப்பு
மேலும் பீகார் மாநிலம் நாளந்தா மருத்துவ கல்லூரியில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாட்டியாலா மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications