செம டுவிஸ்ட்..டிமிக்கி காட்டிய கெஜ்ரிவால்! பஞ்சாப் சிஎம்முடன் பஞ்சாய் பறந்துட்டாரே! அப்போ ED விசாரணை
டெல்லி: இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அங்கு செல்லாமல் மத்திய பிரதேசத்துக்கு சென்று இருக்கிறார்.
டெல்லியில் ஆம் ஆத்மி மாநில அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட இந்தக் கொள்கையில் இடம் பெற்று இருந்த வரிக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் பற்றிய விபரங்களை முன்கூட்டியே கசிய விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் மூலமாக மதுபான ஆலைகளின் அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்த்ததால் புகார்கள் வந்தன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த விவரங்களை கசியவிட்டு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்தார் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. இதையடுத்து டெல்லி துணை முதலமைச்சராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதேபோல் டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் ஆஜராக மணீஷ் சிசோடியா அவகாசம் கோரிய நிலையில் அது ஏற்கப்பட்டு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.
Delhi CM Arvind Kejriwal will not appear before the Enforcement Directorate (ED) today. He will hold a road show, along with Punjab CM Bhagwant Mann, in Singrauli, Madhya Pradesh today.
— ANI (@ANI) November 2, 2023
(File photo) pic.twitter.com/weeUzG0YNL
சிசோடியா சிபிஐ நீதிமன்றத்தில் மறுநாள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதனை அடுத்து மணீஷ் சிசோடியா தனக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றத்துக்கு செல்லுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் அவர் தன்னுடைய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பல முறை மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டே வந்தது. 8 மாதங்களாக விசாரணைக் கைதியாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து காவலை நீட்டித்து உள்ளது. இதற்கிடையே டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை இதே வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கடந்த 2 நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பி இருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பொய் வழக்கில் சிக்க வைப்பதற்கு அமலாக்கத்துறை முயற்சிப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கெஜ்ரிவாலை விசாரணைக்கு கைது செய்ய திட்டமிட்டு உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி பகீர் கிளப்பி உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் பங்கேற்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் சென்று இருக்கிறார். எனவே அவர் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications