சுத்து போட்ட சிபிஐ.. கேசிஆர் மகள் கவிதாவை திகார் சிறையிலேயே விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேசிஆர் மகள் கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின. இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்தது.

கவிதா, மதுபான வியாபார நிறுவனங்களான சவுத் க்ரூப்பின் முக்கிய உறுப்பினர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டெல்லியில் மதுபான உரிமைக்கு ஈடாக ரூ.100 கோடியை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர். ஹைதராபாத்தில் கவிதாவுக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சோதனையைத் தொடர்ந்து, கேசிஆர் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பணமோசடி வழக்கில் முதல் கட்ட விசாரணையை மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கவிதாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
தனது 16 வயது மகனுக்கு பள்ளித் தேர்வுகள் நடக்கிறது. அதற்காக அவருக்கு தாயின் ஆதரவும் ஊக்கமும் தேவைப்படுகிறது. எனவே தனது இடைக்கால ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி நேற்று கவிதா நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதற்கு முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மற்றும் சம்மன்களுக்கு கவிதா பதில் அளிக்கவில்லை. விசாரணையின் போது கிடைத்த தகவல் குறித்து அவரிடம் கூடுதல் விபரங்கள் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சிபிஐ கோரிக்கைக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி அளித்தார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிபிஐ விசாரணை பிடியில் கவிதா சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications