ப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா? டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது நாளை டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
தற்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது.
இம்மனு மீது இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ப.சிதம்பரமும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்து காவலில் விசாரிப்பது தொடர்பாக நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.