டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்புக்கு குஜராத் போலீஸ் ஏன்? ஆம் ஆத்மி சந்தேகம்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டிய நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்பு விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுவரை பஞ்சாப் போலீஸ் பாதுகாப்பு வழங்கிய நிலையில் அவர்கள் நீக்கப்பட்டு குஜராத் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது ஏன்? என்று ஆம் ஆத்மி கட்சி சந்தேகம் எழுப்பி இருக்கிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வரும் ஆம் ஆத்மிக்கு அக்னி பரீட்சையாக இந்த தேர்தல் கவனிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக இந்த முறையாவது அதாவது 27 ஆண்டுகளுக்குப் பின்னராவது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வெல்லுமா? என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சிங்கிள் டிஜிட் இடங்களையாவது பெற போராடி வருகிறது.
டெல்லியில் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுமே வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. பெண்களுக்கு மாத உதவித் தொகை தொடங்கி கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வரை ஏராளமான வாக்குறுதிகள் 3 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் டெல்லி தேர்தல் களத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லைதான். டெல்லி முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு வழங்கி வந்தனர். தற்போது தேர்தல் ஆணையத்தால் பஞ்சாப் மாநில போலீசார், கெஜ்ரிவால் பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது குஜராத் உள்ளிட்ட மாநில போலீசார் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். குஜராத் மாநில போலீசாரின் உத்தரவை தமது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கெஜ்ரிவால், டெல்லியில் என்னதான் நடக்கிறது? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆம் ஆத்மி தலைவர்களும் கெஜ்ரிவால் பாதுகாப்புக்கு குஜராத் போலீசார் ஏன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்? எனவும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
ஆனால் குஜராத் மாநில உள்துறை அமைச்சரான ஹர்ஷ் சங்வி, தேர்தல் ஆணையமானது பல்வேறு மாநில போலீசாரை வரவழைத்துள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் குஜராத் போலீசாரை மட்டும் குறிப்பிட்டு விமர்சிக்கிறார் என பதிலடி தந்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளைப் பற்றி தெரியாதவரா அரவிந்த் கெஜ்ரிவால்? தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாலேயே 8 கம்பெனி குஜராத் போலீசார் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஹர்ஷ் சங்வி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications