டெல்லி தேர்தலில் பிரதான கட்சிகளில் வட இந்தியர்கள்தான் வேட்பாளர்களா? தென்னிந்தியர்களை புறக்கணிப்பதா?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் தென்னிந்தியர்கள் வாக்களிக்க மட்டும்தானா? பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்காதது ஏன்? என்கிற கலகக் குரலையும் கேட்க முடிகிறது. டெல்லி தேர்தல் களத்தில் வட இந்திய மாநிலத்தவரையே வேட்பாளர்களாக தேர்வு செய்வதாகவும் தென்னிந்தியர் அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் படிப்பு மற்றும் வேலைக்காக கணிசமான எண்ணிக்கையில் தென்னிந்தியர்களும் வசிக்கின்றனர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் கணிசமான எண்ணிக்கையில் டெல்லியில் வசித்தாலும் டெல்லி சட்டசபையில் எப்போதும் தென்னிந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் சொற்பம்தான் என்கின்ற ஆதங்கத்தையும் தென்னிந்தியர் அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

1952-ம் ஆண்டு டெல்லியின் முதல் முதலமைச்சராக கேரளாவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் நாயர்தான் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். ஆனால் ஜவஹர்லால் நேருவின் இந்த முயற்சி பலனளிக்காமல் போனதால் பிரம் பிரகாஷ் டெல்லியின் முதலாவது முதலமைச்சரானார் என்கிற வரலாற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வாஜ்பாய்க்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த ஸ்டீபன், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் வாஜ்பாய் வெறும் 5,045 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெறவும் முடிந்தது.
இதன் பின்னர் 1998-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட கேரளாவைச் சேர்ந்த மீரா பரத்வாஜ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக நுழைந்தார். டெல்லி சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக கால்பதித்த முதலாவது தென்னிந்தியர் மீரா பரத்வாஜ்.
தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என தென்னிந்தியர்கள் பல்வேறு சங்கங்களாக ஒன்று திரண்ட போதும் பிரதான அரசியல் கட்சிகளிடம் இருந்து வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதில்லை; பொதுவாக வட இந்தியர்களைத்தான் வேட்பாளர்களாக தேர்வு செய்யும் போக்கையே பிரதான அரசியல் கட்சிகள் பின்பற்றுவதாகவும் இந்த சங்கத்தினர் ஆதங்க்த்தை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போதைய டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் சிபிஐ கட்சி கேரளாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரான சிஜோ வர்கீஸ் குரியனை வேட்பாளராக அறிவித்துள்ளது. சிஜோவும் தமது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளார்.
பீப்பிள்ஸ் கிரீன் கட்சியில் இருந்து 60 வயது துளசிதரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் துவாரகா தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழர்கள் கணிசமாக வாழும் ஆர்கே புரம் தொகுதியில் ராஷ்டிரிய மானவ் கட்சியின் வேட்பாளராக சரவணன் போட்டியிடுகிறார். புதுடெல்லி தொகுதியில் ஜாதிய ஜன சேனா கட்சி வேட்பாளராக டி நாகேஸ்வர ராவ் களம் காண்கிறார். இப்படி சிறிய கட்சிகள்தான் தென்னிந்தியர்களுக்கு வேட்பாளர் வாய்ப்புகளை சொற்பமாக கொடுக்கின்றனவே தவிர பிரதான கட்சிகளின் கவனம் எப்போது தென்னிந்தியர்கள் பக்கம் திரும்பும் என்பது டெல்லி வாழ் தென்னிந்திய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications