குலுங்குகிறது டெல்லி.. ஜந்தர் மந்தரில் இன்று முதல் விவசாயிகள் போராட்டம்.. தலைநகரில் பரபரப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்றுமுதல் விவசாயிகள் போராட்டத்தை துவங்க உள்ளனர்
டெல்லி: இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.. விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

3 சட்டங்கள்
இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது.. ஆனால், எதுவுமே எந்த தீர்வையும் தரவில்லை.. எனினும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் இப்போது வரை உறுதியாக உள்ளனர். அதனாலேயே இந்த பிரச்சினையில் இழுபறி நீடித்து வருகிறது.

அனுமதி
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் முடிவு செய்தார்கள்.. ஆனால், விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி தரவில்லை..

தொற்று
கொரோனா தற்போது அதிகமாக இருப்பதால், விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது... ஆனாலும் தங்கள் முடிவில் உறுதியாக உள்ள விவசாயிகள், தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் அதாவது வியாழக்கிழமை முதல் தினமும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி
அதுமட்டுமல்ல, அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்த போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.. டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு கிளம்பி செல்கின்றனர்.. அங்குதான் போராட்டம் தொடங்குகிறது.. அதற்கு "விவசாயி நாடாளுமன்றம்" என்ற நிகழ்ச்சியை துவக்கி உள்ளனர்..

பாதுகாப்பு
இதற்காக தினமும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்... இன்றுமுதல் போராட்டம் என்றதுமே டெல்லி போலீஸ் தீவிரமாகி உள்ளது.. இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.. ஒருபக்கம் டெல்லியில் மழை கொட்டி கொண்டிருக்கிறது.. இன்னொரு பக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பை கிளப்பி உள்ளது.. இதற்கு நடுவில் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகரில் பரபரப்பு கூடி வருகிறது.












Click it and Unblock the Notifications