பரபரப்பு.. பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்..!
பிரதமர் மோடிக்கு ரத்தத்தினால் விவசாயிகள் கடிதம் எழுதினர்
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், அந்த சட்டங்களுக்கு எதிராகவும் போராடி வரும் விவசாயிகள், பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்திலேயே கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.. அந்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசு, அதனை சட்டமாக்கியுள்ளது.
ஆனால், மண்டி முறையில் நிறைய குறைபாடுகள் உள்ளதாகவும், அந்த சட்டங்களால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்கள்தான் பலனடைவர், தங்களுக்கு அதனால் பாதிப்புதான் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.. எனவே, அந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி.. காரணம் கேட்கும் காங்கிரஸ்!
இதனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனால், மத்திய அரசு நடத்தும் எல்லா பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில் முடிந்துவிடுகிறது.. அதேசமயம் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், மசோதாக்களை திரும்ப பெறும்வரை தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள்..
இந்த நிலையில், பாதிப்பை தரும் அந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர்... விவசாயிகள் இப்படி ரத்தத்தில் கடிதம் எழுதியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.