சசிகலா புஷ்பாவின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: தமிழக பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாருக்கு எதிராகவும் தீவிரமாக பணியாற்றியும் வருகிறார்.

2016-ல் சசிகலா புஷ்பா வழக்கு
சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், பேஸ்புக், யூ டியூப், கூகுள் ஆகியவற்றில் தம்மை அவதூறாக சித்தரித்து பதிவேற்றிய படங்களை நீக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

படங்களை நீக்க கூடாது
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சசிகலா புஷ்பா ஒரு மக்கள் பிரதிநிதி. அவர் திரைக்குப் பின்னால் யாரை சந்திக்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் சசிகலா புஷ்பா தொடர்பான படங்களை நீக்க கூடாது. சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு சசிகலா புஷ்பா ரூ2 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கடந்த மாதம் அதிரடியாக உத்தரவிட்டது.

சசிகலா புஷ்பா மேல்முறையீடு
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தல்வந்த் சிங் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்தனர். சமூக வலைதளங்கள் சார்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்.

ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பின்னர், பெண்ணின் தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்கள் பதிவு செய்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இதை மீறி அத்தகைய படங்களை பதிவு செய்வது கிரிமினல் குற்றமாகும். மேலும் சமூக வலைதளங்களுக்கு சசிகலா புஷ்பா ரூ2 லட்சம் தர வேண்டும் என்ற உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை சசிகலா புஷ்பா வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications