எப்பாடுபட்டாவது இன்றே டெல்லிக்கு ஆக்சிஜன் போகணும்.. இல்லனா! - ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
டெல்லி: டெல்லிக்கு தினசரி 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தலைநகர் டெல்லியை கூறு போட்டுவிட்டது எனலாம். அங்கு பலரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து வருகின்றனர். எரிக்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

வயதானவர்கள், இளம் வயதினர் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. தீவிரமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஆக்சிஜன் இல்லையெனில், மூச்சு நின்றுவிடும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், முக்கியமான கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க "எப்பாடுபட்டாவது" தேசிய தலைநகரான டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜனை மத்திய அரசு வழங்கவேண்டும். அப்படி இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பாத்ராவில் எட்டு நோயாளிகள் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் இறந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் மத்திய அரசிடம், "டெல்லியில் மக்கள் இறக்கும் போது, நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருப்போம் என்று நினைத்தீர்களா? இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது" என்று காட்டமாக விமர்சித்தது.
இதற்கிடையில், டெல்லியின் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 490 லிருந்து 590 மெட்ரிக் ஆக மத்திய அரசு உடனடியாக அதிகரித்தது.
டெல்லிக்கு ஆக்ஸிஜனை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. "ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்பாடு செய்வது மத்திய அரசின் பொறுப்பு. டெல்லிக்கு ஏப்ரல் 20ம் தேதியே ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பிறகு ஒரு நாள் கூட டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட சப்ளை கிடைக்கவில்லை" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"உத்தரவு செயல்படுத்தப்படாவிட்டால், அடுத்த விசாரணை தேதியில் சம்பந்தப்பட்ட அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்தும் நாங்கள் பரிசீலிக்கலாம். டெல்லிKKU 490MT ஆக்ஸிஜன் விநியோகத்தை எப்பாடுபட்டாவது மத்திய அரசு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். டெல்லி ஒரு தொழில்துறை மாநிலம். அதற்கு கிரையோஜெனிக் டேங்கர்கள் இல்லை" என்றது.
மேலும், விசாரணையை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications