“இதற்கு மேல் அவகாசம் கேட்கவே கூடாது”.. எடப்பாடி பழனிசாமி வழக்கில் டெல்லி ஐகோர்ட் கண்டிப்பு!
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில், இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜோதி சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, ஏற்கனவே இதே போன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் வைத்தது.
அதற்கு நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகல் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், சென்னை ஐகோர்ட் உத்தரவு இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி தரப்பு, இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் இன்று ஆஜராக இயலாததால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினர்.
அதற்கு நீதிபதி, இந்த வழக்கு இப்போது ஒத்திவைக்கப்படுகிறது, அடுத்தமுறை வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும், இதற்கு மேல் அவகாசம் கோரவோ அல்லது ஒத்திவைக்கவோ கோரக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும், தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.
முன்னதாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் நிலுவையில் இருந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகழேந்தியின் மனுவை விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு அப்போது உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் அண்மையில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை பரிசீலனை செய்த நீதிபதி,அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications