2 ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக அப்பீல்- டெல்லி ஹைகோர்ட்டில் இன்றும் விசாரணை!
டெல்லி: 2ஜி வழக்கில் திமுக மூத்த தலைவர்களான ஆ.ராசா எம்.பி, கனிமொழி எம்.பி. ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்றும் நடைபெற உள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ தரப்பில் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தை சிபிஐ தவறாக வழிநடத்தியது. போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்காததால், சிபிஐ மீதான விமர்சனப் பகுதிகளை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி தினேஷ்குமார் சர்மா பெஞ்ச் விசாரிக்கிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 31-ல் விசாரணை நடைபெறும்.












Click it and Unblock the Notifications