பிரதமர் மோடியின் கல்வித் தகுதி விவரங்கள் வெளியிடப்படுமா? தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான விவரங்களை அளிக்க கோரிய விவகாரம் தொடர்பான மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. மோடி, டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ அரசியல் டிகிரியை கடந்த 1978-அம் ஆண்டு பெற்றதாக தேர்தல் பிரமாணப்பத்திரங்களில் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நீரஜ் சர்மா என்பவர் ஆர்டிஐ மூலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு படித்தவர்களின் விவரங்களை கேட்டு இருந்தார்.

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்ன
ஆனால், தனிநபர் விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது எனக் கூறிய டெல்லி பல்கலைக்கழகம் விவரங்களை அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து அவர் மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) முறையீடு செய்தார். இதை விசாரித்த தகவல் ஆணையம், டெல்லி பல்கலைக்கழகம் உரிய ஆவணங்களை வழங்குமாறு உத்தரவிட்டது. தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் மனு தாக்கல் செய்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இதையடுத்து தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடையை கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் விதித்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சச்சின் தத்தா அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின் போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டுவதற்கு தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
பொது நலன் உள்ளதா? என்று கேள்வி
அதேபோல கடந்த 11 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆர்வத்தின் அடிப்படையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாகவும், டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்தகைய ஆவணங்களை கோருவதில் ஏதேனும் பொது நலன் உள்ளதா? என்று கேள்வியை முன்வைத்தார். மானவர்களின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வழங்க முடியாது எனவும் டெல்லி பல்கலைக்கழகம் தனது வாதத்தை முன்வைத்து இருந்தது.
தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பொதுவெளியில் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications