மதுபான கொள்கை ஊழல் வழக்கு.. கேசிஆர் மகள் கவிதாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகினார்.
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இந்த மதுபானக்கொள்கையில் இருந்த சலுகைகள் முன்கூட்டியே கசியவிடப்பட்டு அதன் மூலம் தனியார் லாபம் அடைய உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மணிஷ் சிசோடியா கைது
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ மணிஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது. தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையும் மணிஷ் சிசோடியாவை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதாவும் சிக்கி உள்ளார்.

பல கோடி ரூபாய் லஞ்சம்
மதுபானக் கொள்கையில் அளித்த சலுகைகளுக்காக கவிதாவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்டா சீனிவாசுலு ரெட்டி உள்ளிட்டோரும் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் நிறுவனம் தான், விஜய் நாயர் என்பவர் மூலமாக ஆம் ஆத்மி கட்சியினருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ ஒரு வழக்கும், இந்தப் பேரத்தில் நடந்துள்ளதாகக்கூறப்படும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக கவிதாவிடம் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது. இந்த சூழலில், கவிதாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கவிதா விசாரணைக்காக இன்று ஆஜரானார். முன்னதாக டெல்லியில் உள்ள சந்திரசேகர் ராவ் இல்லம் முன்பாக அவரது கட்சியினர் இன்று குவிந்து இருந்தனர். அமலாக்கத்துறையால் கவிதா இன்று கைது செய்யப்படலாம் என்று சந்திரசேகர் ராவ் கட்சி ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அமலாக்கத்துறை கூறியிருந்தது. இதனால், அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது
முன்னதாக கவிதா எம்.எல்.சியும் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
9 மாநிலங்களில் பா.ஜ.க. புறவாசலைப் பயன்படுத்தி நுழைந்துள்ளது. தெலுங்கானாவில் இதை செய்ய முடியவில்லை. எனவே அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள் என்றும் நாங்கள் அச்சப்படவில்லை. 'தவறு செய்யவில்லை' நாங்கள் அமலாக்கத்துறையை சந்திப்போம். எங்களை போன்றவர்களை சித்ரவதை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?" என்று கூறியிருந்தார்.

உண்ணாவிரத போராட்டம்
முன்னதாக நேற்று முன் தினம் ஆஜராகுமாறு கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், பெண்கள் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதால் இன்று (11 ஆம் தேதி) ஆஜராவதாக கவிதா தரப்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதை அமலாக்கத்துறையும் ஏற்றுக்கொண்டதையடுத்து இன்று விசாரணைக்காக ஆஜர் ஆகியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications