மதுபான கொள்கை ஊழல்: அமலாக்கப் பிரிவு சம்மனுக்கு எதிரான கவிதா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ரூ100 கோடி லஞ்ச பணம் கைமாறிய வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிஷ் சிசோடியாவுடன் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக விசாரணை ஏஜென்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறது.
அமலாக்கப் பிரிவின் சம்மன்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கவிதா வழக்கும் தொடர்ந்திருந்தார். இதில், அமலாக்கப் பிரிவு சம்மன்களுக்கு தடை விதிக்க கோரி இருந்தார் கவிதா. ஆனால் அமலாக்கப் பிரிவு சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருந்தது. இதனால் தொடர்ந்து டெல்லியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன் விசாரணைக்கு கவிதா ஆஜரானார்.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், கவிதா வழக்கை விசாரிக்க உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப் பிரிவு தங்களையும் இவ்வழக்கில் சேர்க்க கோரி கேவியட் மனுவை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தது. இன்றைய வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை கவிதா தரப்பு மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications