"பாஜகவில் இணையவில்லை என்றால் கைது செய்வோம் என மிரட்டினார்கள்.." ஆம் ஆத்மி தலைவர் அதிஷி பகீர்
டெல்லி: ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் சில பகீர் கருத்துகளைக் கூறியுள்ளார்.
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது நீதிமன்ற காவலில் இருந்தாலும், முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். சிறையில் இருந்தாலும் அவரே முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி சில பரபர கருத்துகளைக் கூறினார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: அதாவது கெஜ்ரிவாலுக்கு பிறகு இப்போது அமலாக்கத் துறை தன்னை கைது செய்யத் திட்டம் போட்டு இருப்பதாகக் கூறிய அதிஷி, கூடவே சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா ஆகிய ஆம் ஆத்மி தலைவர்களையும் அமலாக்கத் துறை கைது செய்யத் திட்டம் போட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விரைவில் எங்களின் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தப்படும்.. பின்னர் நாங்கள் காவலில் வைக்கப்படுவோம் என்று எனக்குத் தகவல் வந்தது. கெஜ்ரிவாலை கைது செய்துள்ள நிலையில், பாஜக இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களைக் குறிவைக்கிறது.
மிரட்டல்: நான் பாஜகவில் இணைய வேண்டும் என்று என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள். எனக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வது. அப்படி பாஜகவில் இணையவில்லை என்றால அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்கள் என்றார்கள். பிரமதர் மோடி அனைத்து ஆம் ஆத்மி தலைவர்களையும் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது.
திகார் சிறையில் அறை எண் 2ல் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.. ஜெயிலில் கிடைக்கும் சிறப்பு சலுகைகள் என்னென்ன?
சத்யேந்தர் ஜெயினை முதலில் கைது செய்தார்கள், பிறகு மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் தொடங்கி இப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக மேலும் 4 பேரையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். சதா, துர்கேஷ் பதக் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோருடன் சேர்த்து என்னையும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
எதிர்பார்த்தது நடக்கவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி சிதைந்துவிடும் என்று பாஜக எதிர்பார்த்தது. இருப்பினும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியதைக் கண்டு அவர்கள் மிரண்டு போய்விட்டார்கள். இதன் காரணமாக அடுத்த கட்ட தலைவர்களைக் கைது செய்யத் திட்டம் போடுகிறார்கள்.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.. அடுத்து எங்களுக்குத் தொடர்புடையோர் வீடுகளில் ரெய்டு நடக்கும். அடுத்து எங்களுக்குச் சம்மன் அனுப்பப்படும்.. பின்னர் எங்களைச் சிறையில் அடைப்பார்கள்.. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.. எங்கள் அனைவரையும் சிறையில் தள்ளுங்கள்.. நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கடைசி மூச்சு வரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்போம். எங்களைச் சிறையில் தள்ளினால் புதிய நபர்கள் வந்து பொறுப்பேற்பார்கள்" என்றார்.
இந்த டெல்லி மதுபான கொள்கை விவகாரம் ஆம் ஆத்மிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜாமீனில் வெளியே எடுக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி இப்போது இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications