தலைநகர் யாருக்கு? டெல்லி மாநகராட்சி தேர்தலில் துவங்கிய ஓட்டுப்பதிவு..பாஜக, ஆம்ஆத்மி கடும் போட்டி
டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 1.45 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு செலுத்த 13,638 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லி மாநகராட்சியை 2007 ல் பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பிறகு டெல்லி மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டது. டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது.
இந்த 3 மாநகராட்சிக்கு கடந்த 2012, 2017 ல் தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் 3 மாநகராட்சியின் அதிகாரத்தையும் பாஜக கைப்பற்றியது.
மோடியை எதிர்க்கும் கேசிஆர்.. மகள் கவிதாவுக்கு பறந்த சிபிஐ சம்மன்..டெல்லி மதுபான ஊழலில் இறுகும் பிடி
டெல்லி மாநகராட்சியில் மும்முனை போட்டி
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் மீண்டும் டெல்லி மாநகராட்சி ஒன்றாக மாற்றப்பட்டது. தற்போது உள்ள டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தற்போதைய தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜகவின் பிடியில் மாநகராட்சி
டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்தாலும் கூட மாநகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் பாஜகவின் கை தான் ஓங்கி உள்ளது. கடந்த 2007 முதல் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றி வருகிறது. இதனை தொடர பாஜக முனைப்பு காட்டுகிறது. அதேவேளையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஆம்ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு பிரசாரம் செய்து வந்தது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இன்று தேர்தல்
இதன் தொடர்ச்சியாக இன்று டெல்லி மாநகராட்சிக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த ஓட்டுப்பதிவு மாலை 5.30 மணி வரை நடக்கிறது. மொத்தம் 1.45 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 13,638 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 250 வார்டுகளில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
டிசம்பர் 7 ல் ஓட்டு எண்ணிக்கை
டெல்லி மாநகராட்சி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது டெல்லி மாநகராட்சி பகுதிகளை சுற்றி 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 7 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.