மூச்சு முட்டும் டெல்லி.. புகை மண்டலமான தலைநகர்! காற்று மாசால் மக்கள் அவதி.. விமான சேவைகள் பாதிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகமிக மோசம் அடைந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். டெல்லியில் காற்றின் தர குறியீடு 490 ஐ தாண்டியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுவால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன போக்குவரத்து மட்டும் இன்றி விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. வழக்கமாகவே டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும் என்றாலும் குளிர் காலத்தில் காற்று மாசு அபாய அளவை தாண்டி செல்வதால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

இன்று காலையில் புகை மூட்டம் போல எங்கும் காட்சியளித்தது. குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பரபுல்லா மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
டெல்லியின் காற்றின் தரக்குறியீடு 433 ஆக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் வயதானவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட, பிஎஸ் 6 விதிமுறைகளை பின்பற்றாத கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்-III பெட்ரோல் மற்றும் பிஎஸ்-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று மாசுவால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் புகை மண்டலம் சூழ்ந்தது போல காணப்பட்டது. இதனால், விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போதைய தட்பவெப்பநிலையை கருத்தில் கொண்டு சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படும். எனவே, பயணிகளுக்கு கூடுதல் நேரம் ஆகலாம். சாலை போக்குவரத்தும் தாமதம் ஆக கூடும். தங்கள் குழு சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பயணிகளுக்கு அவ்வப்போது அப்டேட் கொடுக்கப்படும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications