ராமர் கோவில் குறித்த பதிவு.. மணி சங்கர் அய்யர் மகளுக்கு சிக்கல்.. டெல்லி வீட்டை காலி செய்ய நோட்டீஸ்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மகள் சுரண்யா அய்யர் ராமர் கோயில் திறப்பு குறித்து வெளியிட்ட பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி ஜாங்புரா குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மணிசங்கர் அய்யர் குடும்பத்தினர் வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர், அங்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல்லாயிரமாக உயர்ந்துள்ளது, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை தரிசிக்க சென்று வருகிறார்கள். அயோத்தியில் மட்டுமின்றி மொத்த உத்தரப்பிரதேத்திற்குமான மிகப்பெரிய ஆன்மீக தலமாக ராமர் கோயில் உருவெடுத்துள்ளது.

ராமர் கோயில் கட்டப்பட்ட இடம் குறித்து பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மகள் சுரண்யா அய்யர் ராமர் கோயில் திறப்பு குறித்து வெளியிட்ட பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர் குடியிருக்கும் காலனி நல சங்கத்தினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மணி சங்கர் அய்யர் மகள் சுரண்யா அய்யர் அப்படி என்ன பதிவிட்டார்.. அவர் எங்கு வசிக்கிறார் என்பதை பார்ப்போம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரண்யா அய்யர் டெல்லியின் ஜாங்புரா பகுதியில் வசித்து வருகிறார்கள். ராமர் கோவில் திறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஜனவரி 20-ம் தேதி சுரண்யா அய்யர் தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படி பதிவிடுகிறார் "ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கவும் நான் உண்ணா விரதம் மேற்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், அதற்கு 2 நாள் முன்பு இந்தப் பதிவு வெளியாகி டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரண்யா அய்யரின் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் வந்துள்ளன. ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர வந்துள்ளது. இந்நிலையில் சுரண்யா அய்யர் தனது தந்தை மணிசங்கர் அய்யருடன் குடியிருக்கும் ஜாங்புரா குடியிருப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி ஜாங்புரா குடியிருப்போர் நலச்சங்கம் மணி சங்கர் அய்யர் மற்றும் சுரண்யா அய்யருக்கு திடீரென ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் "குடியிருப்புவாசிகளின் மத உணர்வுகளுக்கு எதிராக அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவர் கருத்து தெரிவிப்பதை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது. ஒன்று மன்னிப்பு கேளுங்கள்.. இல்லை.. வீட்டை விட்டு வெளியேறுங்கள்.. ராமர் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரியானதுதான் என நீங்கள் கருதினால். இந்த குடியிருப்பை காலி செய்துவிட்டு, இதுபோன்ற வெறுப்பு பேச்சை சகித்துக் கொள்ளும் மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுங்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications