டெல்லி கலவரம்.. லோக்சபாவில் குரல் எழுப்பிய காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.. ஆபீஸ் மீது தாக்குதல்
டெல்லி: காங்கிரஸ் சீனியர் தலைவரும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின், டெல்லி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: 4 பேர் கொண்ட கும்பல் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அலுவலகம் வந்ததாகவும், அங்கு பணியில் இருந்த ஊழியர் அவர்களிடம் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை எழுதி விட்டு செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் அதை தர மறுத்து அந்த கும்பல் ஊழியரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் தனிப்பட்ட செயலாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தங்களது ஊழியரை தாக்கியதோடு அலுவலகம் சூறையாடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று லோக்சபாவில் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வட கிழக்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்தால் 47 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு இது தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். ரத்தத்தை கொண்டு ஹோலி கொண்டாடப்பட உள்ளது.. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ஹோலி பண்டிகைக்கு பிறகு விவாதிக்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.. அரசு விவாதத்திற்கு பயந்து ஓடுகிறது.. என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆவேசமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications