நபிகள் நாயகம் பற்றிய அவதூறுக்காக மிரட்டுகிறார்கள்- நுபுர் ஷர்மா புகார்! டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு
டெல்லி: நபி நாயகம் குறித்து அவதூறாக பேசியதற்காக தன்னை பலர் மிரட்டுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அளித்த புகாரை தொடர்ந்து டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். இதனை பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் ட்விட்டரில் பகிர்ந்தார்.
முஹம்மது நபி பற்றி பாஜக பிரமுகர் அவதூறு.. உ.பியில் மதக்கலவரம் - புல்டோசர் வரும் என போலீஸ் எச்சரிக்கை
உத்தரப்பிரதேசத்தில் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸ் எச்சரிக்கை
இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 1,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஏராளமானோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வளைகுடா நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
டெல்லி போலீஸ் வழக்கு
இந்த நிலையில் தனக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வருவதாக நுபுர் ஷர்மா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். நுபுர் ஷர்மாவின் புகாரை தொடர்ந்து டெல்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.