கட்டம் போட்ட சட்டை, நீல முகமூடி, கையில் கட்டை.. ஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது
டெல்லி: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையின்போது அந்த வீடியோவில் முகமூடி அணிந்திருந்த பெண்ணின் அடையாளத்தை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் கடந்த வாரம் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்கத் தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்சாத் அவாஸ்தி
ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்களை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷனில் தெரியவந்தது. ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அக்சாத் அவாஸ்தி நாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம் என ஒப்புக் கொண்டுள்ளார்.

போலீஸார்
இவர் ஜேஎன்யூவில் பிரென்ச் படிக்கும் மாணவர். இதையடுத்து அக்சாத் அவாஸ்தியை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அக்சாத் அவாஸ்தி இரண்டு முறை அழைத்தும் டெல்லி போலீஸாரின் விசாரணைக்கு செல்லவில்லை.

தலைமறைவு
இவருடன் ரோஹித் ஷா என்ற ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அக்சாத் தற்போது எங்கிருக்கிறார் என தெரியவில்லை. எனவே அவர் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீஸார்
இந்த நிலையில் வன்முறை வீடியோவில் கட்டம் போட்ட சட்டை, நீல நிற முகமூடி அணிந்து கொண்டு ஒரு பெண்ணும் இருந்தார். அந்த பெண் யார் என்பதை டெல்லி போலீஸார் அடையாளம் கண்டு கொண்டனர். அந்த பெண் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டனர். அவரிடம் விசாரணை நடத்த விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications