களமிறங்கிய காவலர்கள்.. போலீஸ் போராட்டத்தால் அதிர்ந்த டெல்லி.. முடிவிற்கு வந்த 11 மணி நேர ஸ்டிரைக்!
டெல்லி: நீதிமன்ற வளாகத்தில் தங்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி போலீசார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 மணி நேரமாக நடந்த போராட்டம் உயர் அதிகாரிகளின் கோரிக்கை அடுத்து நிறைவு பெற்றது .
கடந்த சனிக்கிழமை அன்று (நவ.2) டெல்லியில் உள்ள திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
இதில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். இதேபோல் ஏராளமான வழக்கறிஞர்களும் காயம் அடைந்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

போராட்டம்
இந்த சம்பவத்தில் தொடர்புயைடவர்கள் மீது காயம் அடைந்த வழக்கறிஞர்களின் வாக்குமூலத்தின் படி எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே டெல்லியில் நேற்று வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றதுடன் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

நீதி வேண்டும்
இந்த நிலையில் தான் டெல்லி மாநில காவல்துறை தலைமையகம் முன்பு இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான போலீசார் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது அவர்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்

சமரசத்திற்கு மறுப்பு
11 மணிநேரத்திற்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தை கைவிட போலீசார் முதலில் மறுத்துவிட்டனர். டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் போராட்டத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து போராடி வந்தனர்.

அதிகாரிகள் ஆதரவு
இந்திய வரலாற்றில் போலீசார் போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும். சீருடைய அணியால் போலீசார் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு டெல்லியில் உள்ள பல ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.

கோரிக்கை
இந்த நிலையில் 11 மணி நேரமாக நடந்த போராட்டம் உயர் அதிகாரிகளின் கோரிக்கை அடுத்து நிறைவு பெற்றது. போலீசாரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷ்னர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூறியதால் போராட்டம் கை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications