டெல்லி சாலைகளில் முள்கம்பி வேலிகள்... இரும்பு தடுப்புகள் - பன்னடுக்கு அரண் அமைத்த காவல்துறை
எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தடுப்பு அரண்களை அமைத்துள்ளனர்.
டெல்லி: எல்லையில் போராடும் விவசாயிகள் டெல்லி நகரத்திற்குள் நுழையாத வகையில் இரும்பு பேரிகார்டுகள், முள்கம்பி வேலிகள், சிமெண்டு தடுப்புகள் என மிகப்பெரிய அரண்களை அமைத்து காவல்துறையினர் பன்னடுக்கு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். 70 நாட்களாக கடும் குளிர், மழை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருவதால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை பறக்க விட்டனர்.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகளை எல்லையில் இருந்து காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியனின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைட் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதோடு விவசாயிகள் மேலும் திரண்டு வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையேற்று பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டு உள்ளனர். பல லட்சம் பேர் திரண்டு வருவதால் காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. எல்லை பகுதிகளில் தண்ணீர், மின்சார வினியோகம் போன்ற அடிப்படை வசதிகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் அசராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிப்பூர் மற்றும் டிக்ரி பகுதிகளில் 31ஆம் தேதி இரவு 11 மணி வரை இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
#ModiPlanningFarmerGenocide என்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட் அல்லது ரீட்வீட் செய்த கணக்குகளை ட்விட்டர் திங்களன்று முடக்கியது. போலி செய்திகள், வன்முறையை தூண்டும் ட்வீட்கள் கொண்ட கணக்குகளை முடக்குமாறு உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து இந்த கோரிக்கை வந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் எல்லையில் போராடும் விவசாயிகள் டிராக்டர்களில் நகரத்திற்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையிலும் பன்னடுக்கு அரண்களை அமைத்துள்ளது. சாலைகளில் குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
ஒரு பகுதிகளில் சாலைகளில் பள்ளம் தோண்டி அதில் சிமெண்டு கலவையை கொட்டி இரும்பு கம்பிகளை பதித்துள்ளனர். முள் கம்பி வேலிகள் சுற்றப்பட்ட இரும்பு பேரிகார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடவே சிமெண்டு தடுப்புகள் வரிசையாக அமைத்து கோட்டை போல தடுப்புகளை அமைத்துள்ளனர்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தடைகள் அமைத்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications