‛‛உறுதியானது தூக்கு’’.. செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
டெல்லி: நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப் தனது தூக்கு தண்டனையை குறைக்க கூறிய கருணை மனுவை ஜனாதிபதி திரெளபதி முர்மு நிராகரித்தார். இதனால் அவருக்கு தூக்கு உறுதியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று செங்கோட்டை. இந்நிலையில் தான் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக முகமது ஆரிப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இவர் தாக்குதல் நடந்த 4வது நாளில் சிக்கினார். விசாரணையில் அவர் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் எல்இடி எனும் லஷ்கர் இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு என்பது 2007 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு முகமது ஆரிப்புக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2011ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த தண்டனை மறுஆய்வு மனு 2012ம் ஆண்டிலும், சீராய்வு மனு 2014ம் ஆண்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. கடைசியாக பயங்கரவாதி முகமது ஆரிப் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு செய்தார்.
இந்த கருணை மனு என்பது மே 15ம் தேதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 27 ம் தேதி அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் முகமது ஆரிப்புக்கான தூக்கு தண்டனை என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications