சரியாக 6.52 மணிக்கு.. சிக்னலில் மெதுவாக வந்த கார் வெடித்தது.. டெல்லி போலீஸ் கமிஷனர் தகவல்!
டெல்லி: "இன்று மாலை 6.52 மணிக்கு, மெதுவாக வந்த கார், சாலையில் ரெட் சிக்னலில் நிற்கும் போது, அது திடீரென வெடித்துள்ளது. இதனால், அருகில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. விசாரணைக்குப் பின் காரணம் தெரியவரும்" என்று டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. மேலும், அருகில் இருந்த 4 வாகனங்களும் கொளுந்துவிட்டு எரிந்தன. இந்தச் சம்பவம் தலைநகரை அதிர வைத்துள்ளது. தகவலறிந்த 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.

ரெட் சின்னல் அருகில் மெதுவாக வரும்போது ஹூண்டாய் i20 கார் தான் வெடித்துள்ளது. அதில் தீப்பற்றியதில் அருகில் இருந்த 4 கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் டெல்லி போலீசார் அங்கு வந்துள்ளனர். NSG, NIA ஆகியவை உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளன.
இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்து உள்ளது. 8 பேர் சடலங்களாகவே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

செங்கோட்டை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், இதில் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார், என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி அமைப்பினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. டெல்லி கார் வெடிவிபத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து, நொய்டா செக்டார்-58 காவல் நிலைய எல்லையின் கீழ் வரும் செக்டார்-62 மற்றும் அருகிலுள்ள பிற மக்கள் கூடும் இடங்களில் நொய்டா காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகள் அமைத்து, சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி முழுமையாகச் சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அமித் ஷா டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் உளவுத்துறை இயக்குநருடன் பேசியுள்ளார். மேலும், ரயில்வே காவல் துறையினர் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா, "இன்று மாலை 6.52 மணியளவில், மெதுவாக வந்த கார், சாலையில் ரெட் சிக்னலில் நிற்கும் போது, அது திடீரென வெடித்துள்ளது. இதனால், அருகில் உள்ள வாகனங்களும் சேதமாகின. என்.ஐ.ஏ, தேசிய தடயவியல் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளும் இங்கே உள்ளன. விசாரணைக்குப் பின் காரணம் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications