மாஜி கவுன்சிலர் ஹுசைன், ஜே.என்.யூ. மாணவர் தலைவர் காலித்துக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு- நீதிமன்றம்
டெல்லி: டெல்லி கலவர சம்பவத்தில், முன்னாள் ஜே.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் பலருக்கு, தொடர்பு இருப்பதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி பெருநகர நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் கூறியதாவது:
கவுன்சிலர், தாஹிர் உசேனுக்கு, உமர் காலித்துடன் தொடர்பு இருந்துள்ளது என்பதற்கு சாட்சியங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. மதக் கலவரத்துக்கு, நிதி உதவி செய்துள்ளார், தனது வீட்டிலிருந்து ஆட்களை திரட்டி எதிர் தரப்பின் சொத்துக்களை தீயிட்டு எரிக்க உடந்தையாக இருந்துள்ளார். அதில் ஒருவர் உமர் காலித் என்பது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் கூட்டம் சேர்ந்துள்ளது. எதிர் தரப்பினரின் சொத்துக்களில் எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளன. வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் ராகுல் கசானா என்பவர் தாஹிர் ஹுசைனின் டிரைவராக பணியாற்றி உள்ளார்.
அவர் காவல்துறையிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு, ஹுசைன் நிதி உதவி செய்ததை ராகுல் கசானா தனது வாக்குமூலத்தில் உறுதி செய்துள்ளார்.
சபாஷ் ரத்தன் டாடா.. முன்னாள் ஊழியருக்காக.. இப்படியும் ஒரு தொழிலதிபர் இருக்க முடியுமா.. நெகிழ்ச்சி!
2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஷாஹின்பாக் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராகுல். அப்போது உமர் காலித் மற்றும் ஹுசைன் ஆகியோர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இவர்கள் ஒன்றாக இருந்துள்ளனர். பிறகுதான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்துள்ளனர். எனவே ஆரம்ப கட்ட விசாரணையில் உமர் காலித் மற்றும் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக போதிய அளவுக்கு சாட்சியங்கள் இருக்கின்றன. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி டெல்லியின் வடகிழக்குப் பகுதியில், மதக் கலவரம் வெடித்தது. குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே எழுந்த இந்த மோதல் பெரும் மதக் கலவரமாக மாறியதால் 53 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹுசைன் வீட்டில் இருந்து ஆயுதங்களை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பிறகு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது, குறிப்பிடத்தக்கது.