16 வயது சிறுமியை 20 முறை குத்தி.. கல்லை போட்டு கொன்ற கொடூரன்! கண்டு கொள்ளாத மக்கள்! டெல்லியில் ஷாக்
டெல்லி: தலைநகர் டெல்லியில் மிகவும் கொடூரமான ஒரு படுகொலை அரங்கேறியுள்ளது. 16 வயதே ஆன இளம் பெண் சுமார் 20 முறை குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நபரை டெல்லி போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்,
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சாம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அப்படியொரு மிக மோசமான ஒரு சம்பவம் தான் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. அங்கே 16 வயதே ஆன இளம் பெண் இளைஞர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளார்.

டெல்லியின் ஷஹபாத் டெய்ரி பகுதியில் 16 வயது சிறுமியை அவரது காதலன் சாஹில் (20) என்பவர் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் அந்த சிறுமியைப் பல முறை உதைத்துள்ளான். மேலும், அருகே இருந்த கல்லையும் அவள் மீது போட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதைவிடக் கொடூரம் என்னவென்றால் இந்த படுகொலை நடக்கும் போது அங்கே பல பேர் அந்தப் பக்கம் சென்றுள்ளனர். அவர்கள் இந்தக் கொடூரத்தைப் பார்த்த போதிலும், அதைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் இளைஞர் அந்த சிறுமியைக் கொடூரமாகத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. பல முறை குத்தி கொடூரமாகத் தாக்கிய பிறகு, அவன் அங்கே இருந்து கிளம்பிவிடுகிறான். இருப்பினும், அதன் பிறகு சில நொடிகள் கழித்து அவன் திரும்பி வந்து, ஒரு சிமென்ட் கல்லை எடுத்து சிறுமி மீது போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்து 30-35 நிமிடங்களுக்குப் பின்னரே போலீசாருக்கு கால் வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி டிசிபி ரவிக்குமார் சிங் கூறுகையில், "நேற்றிரவு 9.30 மணியளவில் சாக்ஷி என்ற 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். அந்த சிறுமி வேறு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாஹில் அந்த சிறுமியை வழிமறித்துத் தாக்கியுள்ளான்.

சாஹிலும் சாக்ஷியும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்குச் சண்டை ஏற்பட்டுள்ளது. சாக்ஷி தனது தோழியின் மகனின் பிறந்த நாள் பார்டிக்கு சென்றுள்ளார். அப்போது தான் சாஹில் அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளான். இப்போது சாஹில் தலைமறைவாக உள்ளான். அவரை நாங்கள் தேடி வருகிறோம். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சாஹில் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் குழு தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பலர் இந்தச் சம்பவத்தை பார்த்தார்கள், ஆனால் தடுக்க எதையும் செய்யவில்லை. டெல்லி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது" என்றார்,
குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், அவரை சற்று முன்பு போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications