அதிதீவிரமாக பரவும் கொரோனா... டெல்லியில் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல்- கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் அங்கு வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், ஆந்திராவை தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் டெல்ல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.67,438. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 50,736. இதுவரை 11,540 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு
டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து டெல்லியில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார்.

டெல்லியில் ஊரடங்கு
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

அத்தியாவசிய பணிகள் மட்டும்..
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஷாப்பிங் மால்கள், ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்படும். திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படாது. அதேநேரத்தில் பார்சல்களை வழங்குவதற்காக மட்டும் ஹோட்டல்கள் செயல்படலாம்.

கூடுதல் படுக்கைகள்
டெல்லியைப் பொறுத்தவரையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை என்பது இல்லை. தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் 5,000க்கும் அதிகமான கூடுதல் படுக்கைகள் உள்ளன. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications