டெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்
டெல்லி: டெல்லியில், பட்டப்பகலில் நட்டநடு சாலையில், இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு டெல்லியில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குர்வேஷ் (40) மற்றும் கன்ச்சி (28) ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் டெல்லியில் மட்டும் குர்வேஷ் மீது 41 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கன்ச்சி மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
நந்த்நகரி என்ற பகுதியில், இன்று பிற்பகல் 12.12 மணிக்கு, சிக்னல் ஒன்றின் அருகே பைக்்கில் வந்த மர்ம நபர்கள், சரமாரியாக குர்வேஷ் மற்றும் கன்ச்சி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக, இருவரையும், குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், குர்வேஷ் மற்றும் கன்ச்சி இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம், 7 முதல் 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications