"மெட்ரோ"வில் டிக்கெட் எடுத்து பயணித்த மோடி.. "இந்திய பல்கலை.களுக்கு சர்வதேச அங்கீகாரம்": பிரதமர் உரை
டெல்லி: மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக, இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி, டெல்லி பல்கலை மாணவர்களிடம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று காலை 11 மணியளவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
பல்கலைகழகத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் டெல்லி பல்கலைக்கழக கணினி மையம் மற்றும் அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படும் கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதிர்வலை: முன்னதாக, பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, நேற்றைய தினம், அதாவது ஜூன் 29ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், பண்டிகை கொண்டாட விரும்பும் ஊழியர்களுக்கு அலுவலகத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை இருந்தும், இந்த அறிவிப்பு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒரு பிரிவினர் கண்டித்ததுடன், அறிவிப்பையும் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
கண்டனம்: "2023ம் ஆண்டிற்கு முன்பே அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல் பல்கலைக்கழகத்திற்குத் தெரியும்... அப்படி இருக்கும்போது இந்த தேதியை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? சம்பந்தப்பட்ட நாள், ஹோலி அல்லது தீபாவளியாக இருந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி நடவடிக்கையை எடுத்திருக்க வாய்ப்பில்லை" என பேராசிரியர்கள் தரப்பு சாடியிருந்தது பல்வேறு தரப்பினரின் கவனத்தை திருப்பியிருந்தது.
பல்கலைக்கழகத்தின் வேலைநாள் அறிவிப்பானது, மதவெறி மனப்பான்மை, மற்றும் ஒரு சமூகத்தை வேண்டுமென்றே தனிமைப்படுத்தும் முயற்சி கொண்ட ஒரு நடவடிக்கையாகும் என்றெல்லாம் விமர்சனங்கள் குவிந்தன..

எதிர்பார்ப்பு: இந்நிலையில்தான், டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் டெல்லி பல்கலைக்கழக கணினி மையம் மற்றும் தொழில்நுட்ப பீட கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படும் கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்ட உள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி பல்கலைக்கழகம் மே 1, 1922 இல் நிறுவப்பட்டது.... கடந்த நூறு ஆண்டுகளில், பல்கலைக்கழகம் அபரிமிதமாக வளர்ந்து விரிவடைந்து இப்போது 86 துறைகள் மற்றும் 90 கல்லூரிகளை கொண்டுள்ளது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டெல்லியில் இன்று நடைபெற இருக்கும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கு யாரும் கருப்பு உடையணிந்து வர கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது..
இதனிடையே, நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ள பிரதமர் மோடி டெல்லி மெட்ரோவில் டெல்லி பல்கலைக்கழகத்தை சென்றடைந்தார்.. டெல்லி பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பெருமிதம்: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, "இந்தியா சுதந்திரம் பெற்று 75வது கொண்டாடும் நேரத்தில், இந்த பல்கலைக்கழகம், நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது... மாணவர்களை போல், நானும் இங்கு, மெட்ரோ ரயிலில் தான் வந்தேன். இந்த பல்கலை என்பது ஒரு இயக்கம் போல் செயல்படுகிறது. தன்னுடைய உயர்ந்த மாண்புகளை டெல்லி பல்கலை எப்போதும் நிறைவேற்றி உள்ளது.
வழிகாட்டும் சக்திகள்: டெல்லியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் படிக்கிறார்கள். சர்வதேச ஜிடிபியில், இந்தியாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.. 100 வருட அடிமைத்தனமானது, இந்தியாவின் கல்வி முறையை அழித்ததுடன், வளர்ச்சியையும் பாதித்தது.. ஆனால், இப்போது, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக நம் நாடு உருவெடுத்திருக்கிறது. நமது வழிகாட்டி சக்திகளாக இளைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்..
கல்வியின் நோக்கமே இப்போது மாறிவிட்டது. நம்முடைய மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதில், கவனத்தை திருப்பியிருக்கிறார்கள்.. இளைஞர்களுக்கு புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய அளவில் உதவும்...
அங்கீகாரம்: இந்தியாவில் சமீபகாலமாக, ஐஐடி-கள், ஐஐஎம்-கள், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.. கல்வித்துறையில், அரசின் கொள்கைகள் காரணமாக, இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.. அத்துடன், இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன" என்றார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications