சட்டசபை தேர்தல்.. பெண் காவலர் சுட்டுக் கொலை.. பரபரக்கும் டெல்லி
டெல்லி: டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
தேர்தலையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் போலீஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi: A Sub-Inspector of Delhi Police - Preeti, posted in Patparganj Industrial Area Police Station, was found dead with multiple bullet injuries in Rohini area, earlier tonight. Forensic team and Police are present at the spot. pic.twitter.com/1tRejhCpjV
— ANI (@ANI) February 7, 2020
பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ப்ரீத்தி. இவர் நேற்று இரவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு வீட்டுக்கு இரவு 9.30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் ப்ரீத்தியின் தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் ப்ரீத்தி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். ரோஹினி பகுதியில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ப்ரீத்தியின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
ப்ரீத்தியை மர்ம நபர் 3 முறை சுட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலையில் சுட்ட போது அவர் இறந்துள்ளார். ப்ரீத்தி 2018-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் பிரிவை சேர்ந்தவர். இவர் ஹரியானா மாநிலம் சோனேபட்டை சேர்ந்தவர். பணிக்காக ரோஹினி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நாட்டுத் துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பு, பேரிகாடு தடுப்புகள், வாகன சோதனைக்கு மத்தியில் பெண் காவலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.