தீபாவளி பண்டிகையால் தலைநகருக்கு வந்த சீரியஸான பிரச்சனை.. டெல்லியில் காற்றின் தரம் மிக மோசம்! அடடா!
டெல்லி: தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 31) கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் நிலையில், டெல்லி மக்களோ தீபாவளி என்றாலே பட்டாசு புகை கிளம்பி பல பாதிப்புகள் ஏற்படுமே என அச்சத்தில் உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பட்டாசுகளை அதிகளவில் வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சனை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய மற்றும் சேமித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போலீசார், பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு நேற்றே கடுமையாக அதிகரித்தது. காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக பதிவாகியுள்ளது. AQI அளவுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. "மோசமானது" (AQI 201-300), "மிகவும் மோசமானது" (301-400), "கடுமையானது " (401-450), மற்றும் "கடுமையாகத் தீவிரமானது" (450க்கு மேல்).
நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் குறியீடு 278 ஆக இருந்தது. முந்தைய நாளில் இது 268 ஆக இருந்தது. என்றாலும் டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மோசம் என்ற நிலையிலேயே தொடர்ந்து நீடித்து வந்தது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவலின் படி, 36 கண்காணிப்பு மையங்கள் வழங்கிய தகவல்களில், ஆனந்த் விகார், அசோக் விகார், அயா நகர், பவானா, ஜஹாங்கீர்புரி, முந்த்கா, விவேக் விகார் மற்றும் வஷிர்புர் ஆகிய எட்டு இடங்களில் நேற்று காலையில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று (அக்டோபர் 30) மாலை 4 மணிக்கு காற்று தரத்தின் குறியீடு 307ஐ எட்டியது. ஆனந்த் விஹார் மற்றும் முண்ட்கா பகுதிகளில் AQI 400 க்கு மேல் பதிவாகியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய இரவிலும், தீபாவளி நாளிலும் டெல்லியை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் இன்னும் மோசமாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
டெல்லியில் காற்றின் தரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மிகவும் மோசமாக (AQI 300 முதல் 400 வரை) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. பட்டாசு பயன்பாடு அதிகரித்தால், நிலைமை மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்டாசு தடையை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இது பொது சுகாதாரத்திற்கு அவசியம் என்று கூறினார். இங்கு 'இந்து-முஸ்லீம்' விவகாரம் இல்லை, தீபாவளி என்பது ஒளியின் பண்டிகையாக கொண்டாடுவதால், பட்டாசுகளுக்குப் பதிலாக தீபங்களை ஏற்றுமாறு மக்களை வலியுறுத்தி உள்ளார் கெஜ்ரிவால்.












Click it and Unblock the Notifications