"எந்தவொரு மாநிலத்திலும் ஒரு சீட் கூட குறையாது.." திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா! அனல் பறக்கும் விவாதம்
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் குறைகிறது என்பதே இவர்கள் வாதம். இதற்கிடையே தொகுதி மறுசீரமைப்பால் எந்தவொரு மாநிலத்திற்கும் ஒரு இடம் கூட குறையாது என மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இன்றைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் மத்திய அரசு செய்தது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்பது ஒருபுறம் இருந்தாலும், அதோடு இணைந்த "தொகுதி மறுசீரமைப்பு" குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்திலும் கூட அதுவே எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் பேசிய எம்பிக்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தாலும் கூட தொகுதி மறுசீரமைப்பை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

இரு முக்கிய மசோதாக்கள்
இன்றைய தினம் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முக்கிய அங்கமாக, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் இரண்டு முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்தார். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யப்போகும்131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தொகுதிகளை எப்படி மாற்றி அமைப்பது என்பது குறித்த மசோதா என இரண்டையும் தாக்கல் செய்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவையும் தாக்கல் செய்யவே விவாதத்தில் அனல் பறந்தது.
கடும் எதிர்ப்பு
தொகுதி மறுசீரமைப்பை மாநில அரசுகள் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் இதனால் குறையும் என்பதே இப்போது முக்கியமான பிரச்சினையாக எழுப்பப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதி கூட குறையாது
"தொகுதி மறுசீரமைப்பால் எந்த ஒரு மாநிலமும் தனது ஒரு இடத்தைக்கூட இழக்காது" என அமித் ஷா உறுதி அளித்தார். அதாவது, வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரித்தாலும், தென் மாநிலங்களில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கப்படும் என்பதையே அமித் ஷா சொல்லியுள்ளார். இருப்பினும், இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக இடங்கள் குறையாது என்ற போதிலும் பிரதிநிதித்துவம் குறையும் என்பதே எதிர்க்கட்சிகள் விமர்சனமாக உள்ளது.
சிக்கல் என்ன
உதாரணமாக உபி, பீகார் உள்ளிட்ட இந்தி ஹார்ட் லேண்ட் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை 76.8% வரை அதிகரிக்கிறது. அதாவது இப்போது லோக்சபாவில் 38.1 சதவீதமாக இருக்கும் இந்தி மாநிலங்களின் பலம், 850 தொகுதிகள் என மாறும்போது அது 43.1 சதவீதமாக அதிகரிக்கும். அதேநேரம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா மாநிலங்களின் எம்பி இடங்கள் வெறும் 33.3% மட்டுமே உயரும். இதனால் மொத்த நாடாளுமன்றத்தில் தெற்கின் அதிகாரம் 24.3 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாகக் குறையும். அதாவது ஒட்டுமொத்த இடங்கள் எண்ணிக்கை குறையாது.. அதிகரிக்கும்.. ஆனால், நாடாளுமன்றத்தில் நமக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவம் குறையும் என்பதே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விமர்சனமாக இருக்கிறது.
மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட உடனே காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த கிரண் ரிஜிஜு மற்றும் அமித் ஷா, "இப்போது மசோதாக்கள் அறிமுகம் தான் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவாதம் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அவசரப்பட வேண்டாம்" என்று பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications