பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பு.. ப.சிதம்பரம் அதிர்ச்சி தகவல்
டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து, இன்று, நிருபர்களிடம், வீடியோ வாயிலாக பேட்டியளித்தார் ப.சிதம்பரம். அப்போது ப.சிதம்பரம் கூறியதாவது:
பண மதிப்பிழப்பிற்கு பிறகு, குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக கெட்ட செய்தி வந்துள்ளது. 2017 இல் 2.9 சதவீதமாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 2018 இல் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதாவது, மத்திய அரசின் மனசாட்சியைத் தவிர, அனைவரையுமே பணமதிப்பிழப்பு பாதித்துள்ளது. அதிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான் என்று தெரியவந்துள்ளது.
மற்றொரு கெட்ட செய்தி என்னவென்றால், சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் 2019 ல் தேசிய வருமானத்தில் 21 சதவீதத்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். அதாவது நாட்டின் வளங்கள் குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் குவிந்து வருகிறது.
பொருளாதாரம் தொடர்ந்து கடுமையான நெருக்கடியில் உள்ளது மற்றும் பொருளாதாரத்தை சீரமைக்க அரசிடம் திட்டம் எதுவும் இல்லை. மறுபுறம், பொருளாதாரத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், பொருளாதாரம் குறித்து தலைப்புச் செய்திகள் வந்துவிடாத வண்ணம் நிர்வகிக்கவும் மத்திய அரசு ரொம்பவே பிஸியாக வேறு வேலைகளை பார்த்து வருகிறது. இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, அப்போது புழக்கத்திலிருந்த உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி மதிப்பிழப்பு செய்வதாக உத்தரவு பிறப்பித்தார். இதனால் நாட்டில் பணப் புழக்கம் குறைந்து, பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியது என்று பல பொருளாதார அறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications