சித்தராமையாவை சந்திக்க மறுத்த ராகுல் காந்தி.. முதல்வர் பதவி டிகே சிவக்குமாருக்கு செல்கிறதா?
டெல்லி: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது .இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா டெல்லியில் 3 நாள் பயணமாக சென்றார். அவரால் ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. சித்தராமையா அப்பாயின்ட்மென்ட் கேட்டும் ராகுல் காந்தி வழங்காவில்லை. இதனால் கர்நாடகா முதல்வர் பதவி டிகே சிவக்குமார் வசம் செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையாவை, ராகுல் காந்தி அவமானப்படுத்தி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். துணை முதல்வராக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேசி வருகின்றனர்.
இதனால் சித்தராமையா - டிகே சிவக்குமார் தரப்பினர் இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ‛‛கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை'' என்றார். அதேபோல் டிகே சிவக்குமார், ‛‛காங்கிரஸ் மேலிடம் எனக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளது. அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறேன். இப்போது முதல்வர் பதவி பற்றி பேச விரும்பவில்லை'' என்றார்.
இதற்கிடையே தான் சித்தராமையா 3 நாள் பயணமாக கடந்த 9 ம்தேதி டெல்லி சென்றார். இன்று அவர் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிபனார். டெல்லியில் அவர் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவை சந்தித்தார். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். ராகுல் காந்தியை சந்திக்க சித்தராமையா முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கேவுடன், ராகுல் காந்தி ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி சித்தராமையாவிடம் கேட்டபோது, ‛‛ராகுல் காந்தியை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை'' என்றார். இந்நிலையல் தான் ராகுல் காந்தி, சித்தராமையாவை அவமானப்படுத்தி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. பாஜகவின் சமூக வலைதள பொறுப்பாளர் அமித் மாளவியா இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛ராகுல் காந்தியை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. காந்தி குடும்பத்தினர் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த தலைவரை அவமதிப்பது இது முதல் முறையல்ல.
உடல்நலம் சரியில்லாமல் இருந்த வீரேந்திர பாட்டீலை, ராஜீவ் காந்தி எவ்வாறு நீக்கினார் என்பதை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. இது மாநிலத்தில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும் பலவீனமாக இருக்கும் சித்தராமையா தனக்கு எதிராக சதி செய்யும் டி.கே.சிவக்குமாரின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டிகே சிவக்குமார், சித்தராமையாவின் நாற்காலியை எடுத்துக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் பதவி குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதனால் சித்தராமையாவின் திடீர் டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. டிகே சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடத்திடம் நல்ல பெயர் உள்ளது. சித்தராமையாவிற்கும் நல்ல பெயர் இருந்தாலும் கூட அவருக்கு வயது 7 6 வயது ஆகிறது. இதனால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்கினால் மாநிலத்தில் கட்சி நீண்டகாலம் உயிர்ப்புடன் இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் தான் சித்தராமையா தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள டெல்லி சென்றதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படியான சூழலில் ராகுல் காந்தி அவரை சந்திக்க மறுத்துள்ளார். இதனால் டிகே சிவக்குமார் வசம் முதல்வர் பதவி செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இதுபற்றிய கேள்விக்கு முதல்வர் சித்தராமையா இன்று பதிலளித்தார். அப்போது அவர்‛கர்நாடக முதல்வர் பதவி குறித்து எத்தனை முறை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்? அது குறித்து மேலிடத்துடன் விவாதிக்கவே இல்லை'' என்றார். ஆனால் உண்மையில் முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக தான் சித்தராமையா டெல்லியில் முகாமிட்டுள்ளதாகஅரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications