ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா?
டெல்லி: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை அண்மையில் விற்பனை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பொருளாதார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவையின் பெரும்பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஈரான், சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தான் அதிக அளவு எண்ணெய் இறக்குமதியாகிறது. இதனால், உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது.

அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படும் எந்த மாற்றமும் இந்திய பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றம் மற்றும் மோதல் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்நியச் செலாவணி
இதன் விளைவாக இந்தியா அதிக அளவில் அந்நியச் செலாவணியை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனுடன், ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதும் பொருளாதாரத்திற்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எரிபொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க உலோகங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இதன் மூலம் வெளிநாட்டு செலவினத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொதுவெளியில் கிடைத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஆய்வு நிறுவனமான ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வின்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்பனை செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தங்க விற்பனை
இதன் மூலம் கிடைத்த வருவாய் அந்நியச் செலாவணி சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையால் சுமார் 750 கோடி டாலர் அளவுக்கு அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். பொதுவாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் போது, ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு மதிப்பும் உயர்வதே வழக்கம். மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் அதிகரிக்கும். ஆனால் இந்த முறை அதற்கு மாறாக ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பில் குறைவு பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
இதுவே தங்க விற்பனை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவது, ரூபாயின் மதிப்பை பாதுகாப்பது மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்ற காரணங்களுக்காக மத்திய வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வது உலகளவில் புதிய விஷயம் அல்ல. பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம்.
விளக்கம் அளிக்குமா?
எனினும், இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. தங்க விற்பனை நடைபெற்றதா, நடைபெற்றிருந்தால் எந்த அளவில் நடைபெற்றது என்பது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால், அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் தங்கம் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது பொருளாதார வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இதுகுறித்து விளக்கம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications