கைகோர்த்த இந்தியா - சீனா.. 5 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை தொடங்கியது.. ரூட் மேப் இதுதான்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட தொடங்கி உள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியா - சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - சீனா இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட நேரடி விமான சேவை இன்று தொடங்கி உள்ளது. இதனை இந்தியாவுக்கான சீன தூதர் யூ ஜிங் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் உண்மையாகி உள்ளது'' என்று கூறியுள்ளார்.

அதன்படி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து இன்று முதல் விமானம் சீனாவின் குவாங்சோ நகருக்கு புறப்பட்டு சென்றது. இண்டிகோ நிறுவனத்தின் விமானம் இந்த சேவையை தொடங்கி உள்ளது. இண்டிகோவின் Airbus A320neo விமானம் இன்று கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவை இனி தினமும் இருக்கும்.
அதேபோல் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு விமான சேவையை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்டமாக இண்டிகோ விமானம் டெல்லி - குவாங்சோ நகர் இடையே விமான சேவையை தொடங்கும்.
மேலும் நவம்பர் 9 ம்தேதி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு முதல் விமானம் வர உள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து டெல்லிக்கு அந்த விமானம் பயணிக்க உள்ளது. அதன்பிறகு வாரத்தில் 3 விமானங்கள் இந்த சேவையை தொடங்க உள்ளது. இந்த நேரடி விமான சேவையின் மூலமாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால் இருநாடுகள் இடையே சுற்றுலா, வர்த்தகம் சார்ந்த உறவுகள் அதிகரிக்கும்.
முன்னதாக நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையோன எல்லை பிரச்சனை மோதலாக மாறியது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டன. இதையடுத்து நம் நாடு சீனாவுடனான உறவை துண்டித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருநாடுகள் இடையே சுமூக உறவு இல்லை. சீனாவுக்கான நேரடி விமான சேவை, சீன செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டன.
ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்ததோடு, சீனாவையும் சீண்டி வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பகையை மறந்து நம் நாடும், சீனாவும் கைகோர்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்லாத நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அங்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இது இந்தியா - சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்தியா - சீனா கைகோர்ப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. இதனால் தான் இருண்ட சீனா, இந்தியாவை தங்களிடம் இருந்து பிரித்து விட்டதாக டிரம்ப் சமீபத்தில் வலைதள பக்கத்தில் புலம்பி இருந்தார்.
முன்னதாக மோடி சீனா செல்வதற்கு முன்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். எல்லை பிரச்சனையை தீர்த்து, அமைதியை கொண்டு வந்து சுமூகமான உறவை வளர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. வர்த்தகம் தொடர்பாகவும் ஜெய்சங்கர் , வாங் யீயுடன் விவாதித்தார். இப்படி இருநாடுகள் இடையேயான உறவு வலுவடைந்து வரும் நிலையில் தற்போது நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியா - சீனா உறவை இன்னும் வலுவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications