அசாமில் திடீரென வெடித்த வன்முறை.. உயிருடன் எரிக்கப்பட்ட 2 பேர்! உச்சக்கட்ட பதற்றம்
டெல்லி: அசாம் மாநிலத்தில் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதலில் 2 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து வெடித்த வன்முறையில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்திருக்கின்றன.
கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றதில், காவல்துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மணிப்பூரில் தொடர்ந்து நீடித்து வரும் பதற்றமான சூழல் தற்போது அசாம் மாநிலத்திற்கும் பரவியிருப்பதாக அச்சம் எழுந்திருக்கிறது.

அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் இந்த வன்முறை சம்பவம் வெடித்திருக்கிறது. கர்பி ஆங்லாங் பகுதியில், இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்து வந்தன. இந்நிலையில் திடீரென தற்போது வன்முறை ஏற்பட்டிருக்கிறது. வன்முறையின்போது கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதில், சுரஜ் தே எனும் 25 வயது மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீ வைக்கப்பட்ட கடை, சுரஜ் தேயின் வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது அவர் கடைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. "கடை அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. மற்றவர்கள் தப்பித்துவிட்டனர், ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் உடனடியாக வெளியேற முடியவில்லை," என்று உள்ளூர்வாசிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது.
கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறைகளில் இருவர் உயிரிழந்ததை அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதிப்படுத்தினார். "மேற்கு கர்பி அங்லாங் நிலைமையை நான் உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். இன்றைய அமைதியின்மையில் இரண்டு பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது" என்று முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வன்முறையில் இரண்டாவதாக உயிரிழந்தவர் உள்ளூர்வாசியான சிங்தி திமுங் ஆவார். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலையில் அவர் உயிரிழந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க கெரோனி பகுதியில் புதன்கிழமை கூடுதல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கவும் அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர், அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்த கொந்தளிப்பான சூழல் குறித்து விளக்கமளித்த அசாம் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஹர்மித் சிங், திங்கட்கிழமை முதல் அப்பகுதியில் மக்கள் போராட்ட மனநிலையில் இருந்ததாக கூறியுள்ளார். பதற்றத்தைத் தணிக்க, அவர் நேரடியாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், திங்கட்கிழமை இரவு, உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நலம் குன்றியதால், போராட்டத் தலைவர் மருத்துவப் பரிசோதனைக்காக கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், போராட்டத் தலைவர் கைது செய்யப்பட்டதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டதாலேயே நிலைமை மேலும் மோசமடைந்ததாக டிஜிபி விளக்கினார்.
செவ்வாய்க்கிழமை, போராட்டக்காரர்கள் பாலம் ஒன்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். இதற்கு எதிராக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளாகினர். "நாட்டு வெடிகுண்டுகளும் கற்களும் வீசப்பட்டன. வில் அம்புகளால் நானும் தாக்கப்பட்டேன்," என்று சிங் தெரிவித்தார். இந்த வன்முறையால் பல கடைகளுக்கு தீ வைக்கும் தாக்குதல்கள் நடந்ததாகவும், மோதல்களின்போது 48 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். மணிப்பூரை தொடர்ந்து தற்போது அசாமும் பதற்றத்திற்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications