டூல் கிட் வழக்கு : திகார் சிறையில் இருந்து விடுதலையானார் திஷா ரவி
பெங்களூருவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.
டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிறை நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும்குளிர், மழையை பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 90வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் டூல்கிட் தயாரித்ததாக காவல்துறையினர் புகார் தெரிவித்தனர்.
இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் டூல்கிட்டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி காவல்துறையினர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திஷா ரவியை கைது செய்தனர். கைது செய்த திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அந்த காலக்கெடு கடந்த 20ஆம் தேதி முடிந்த நிலையில் மீண்டும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மூன்று நாள் காவல் முடிந்ததும் திஷா ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் மேலும் 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கோரினர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஆர்வலர்கள் நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் இருவருடன் திஷா ரவியிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு திஷா ரவியின் வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்தார்.சிறையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உண்டு. அவரை ஏன் போலீஸ் காவலில் எடுக்க வேண்டும் என்றும் அகர்வால் வாதிட்டார். அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திங்கட்கிழமையன்று அனுமதி அளித்தனர்.
இதனிடையே, திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செவ்வாய்கிழமையன்று காலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறைக்கும் அவருக்கு என்ன தொடர்பு உள்ளது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது. திஷா ரவி தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், திஷா ரவிக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிறை நடவடிக்கைகள் முடிவடைந்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மாணவி திஷா ரவி. கடந்த 13ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு 10 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications