ஒருவரின் ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமையாம்? ராகுலுக்காக குரல் கொடுத்த "சகோதரி" கனிமொழி!
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி தொடர்பாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியதை சுட்டிக் காட்டி லோக்சபாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். மேலும் ஜாதி என்பது பெருமை என்று சொல்லக் கூடிய ஒரு ஆட்சி, ஜாதி தெரியாதவர்களை இழிவுபடுத்துவதை ஏற்கக் கூடிய ஒரு பிரதமர் உருவாக்கக் கூடிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்றார் கனிமொழி.
லோக்சபாவில் இன்று கனிமொழி எம்பி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்விக்கு நீங்கள் ஒதுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறீர்கள். தமிழ்நாட்டில் ஒரு மாணவன் படித்தாலும் அந்த பள்ளியை நாங்கள் மூடுவது இல்லை. ஆனால் அதிகமான மாணவர்கள் இல்லை என்றால் அந்த பள்ளியை மூடிவிட்டு அந்த ஊரில் இருந்து அதிக தொலைவில் இருக்கிற ஒரு இடத்தில்தான் கல்வியை சொல்லித் தருவோம் என்றால் எப்படி கல்வி கற்க முடியும்?

நீட் தேர்வு தேவை இல்லை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒவ்வொரு சிறு நகரத்திலும் கல்லூரிகளை உருவாக்கினார். இந்த கல்லூரிகளை எல்லாம் மூடக் கூடியதுதானே உங்களது புதிய கல்விக் கொள்கை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லுரிகளை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் நீட் தேர்வு மூலமாக மாணவர்களின் கனவுகளை எல்லாம் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனை மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்? உங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.
கோச்சிங் சென்டர் தொழில் வளம்: இந்த அரசாங்கத்தில் ஒரே ஒரு தொழில் வளர்ந்துள்ளது. ரூ5780 கோடி அளவுக்கு கோச்சிங் சென்டர்கள் வருமானம் பார்த்துள்ளன. தேசியத் தேர்வு முகமை 28 தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் அரசாங்கத்தில் ஒருவர் கூட நிரந்தரப் பணியில் இல்லை. அப்படி எனில் வினாத்தாள் ரகசியத்தை உங்களால் எப்படி பாதுகாக்க முடியும்? இதைத்தான் எங்கள் முதல்வர் முதல் நாளில் இருந்து நீட் தேர்வு தேவையே இல்லை என்கிறார்.

பெரியாரை பற்றி பேசமாட்டீர்கள்: உங்கள் பாடப் புத்தகங்களில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டது பற்றி உங்களது அரசியல் வரலாறு பேசாது. தமிழ்நாட்டு தலைவர்களைப் பற்றி பேசமாட்டீர்கள். பெரியாரைப் பற்றி நிச்சயமாக பேசமாட்டீர்கள். ஆனால் சாவர்க்கர் பற்றி பேசுவீர்கள். இதையா மாணவர்களுக்கு சொல்லித் தருவது?

சகோதரியாக கேட்கிறேன்.. : திராவிட இயக்கம் ஜாதி என்ற கட்டமைப்பை உடைக்கப் பாடுபடுகிறது. நீதிக்கட்சி முதல் இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை போராடுகிறோம். ஒரு தாய், தந்தை, சகோதரியின் வருத்தத்துடன் ஒன்றை பதிவு செய்கிறேன். உன் ஜாதி என்ன என்பது உனக்கு தெரியாது? என ஒரு எம்பி மற்றொரு எம்பியை பார்த்து கேட்கிறார். ஒருவருடைய ஜாதி என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது? என்பது எனக்கு தெரியவில்லை. ஜாதி அற்றவராக வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. அதைவிட வருத்தப்படக் கூடியது, அந்தப் பேச்சை ஆதரித்து பாராட்டி இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். ஜாதி என்பது பெருமை என்று சொல்லக் கூடிய ஒரு ஆட்சி, ஜாதி தெரியாதவர்களை இழிவுபடுத்துவதை ஏற்கக் கூடிய ஒரு பிரதமர் உருவாக்கக் கூடிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது. எங்கள் முதல்வர் ஸ்டாலின் கடைசி வரை போராடுவார். நாங்களும் போராடுவோம். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications